மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்


மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 5 Aug 2018 9:54 PM GMT (Updated: 5 Aug 2018 9:54 PM GMT)

கீழ்கட்டளையில், சாலையை கடந்து செல்ல முயன்றபோது மோட்டார்சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த வாலிபர், மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

ஆலந்தூர், 


சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் காந்திநகரைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(வயது 37). இவர், கீழ்கட்டளையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 28-ந் தேதி இரவு உணவகத்தின் அருகே மேடவாக்கம் சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் அலெக்சாண்டரும், அவர் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கண்ணன் என்பவரும் காயம் அடைந்தனர்.

அலெக்சாண்டர் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கண்ணன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அலெக்சாண்டர், மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து வாலிபரின் உடலில் இருந்து இருதயம், கணையம், சிறுநீரகம் உள்பட 5 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேருக்கு பொருத்தப்பட்டது.

மூளைச்சாவு அடைந்த அலெக்சாண்டருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், அன்பரசி(7) என்ற மகளும், ஆதர்ஸ் விஷ்வா(5) என்ற மகனும் உள்ளனர். மூளைச்சாவு அடைந்த அலெக்சாண்டர் ஆலந்தூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் துரைவேலுவின் அண்ணன் மகன் ஆவார். 

Next Story