நல்லம்பள்ளி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்


நல்லம்பள்ளி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:15 PM GMT (Updated: 6 Aug 2018 7:50 PM GMT)

நல்லம்பள்ளி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டை ஊராட்சிக்குட்பட்டது வடக்குதெரு கொட்டாவூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள், அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதி மற்றும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஊரின் மையப்பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பெண்கள் அந்த மதுக்கடை முன்பு திரண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு இங்கு மதுக்கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்த அதியமான்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுங்கள் என பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் அந்த மதுக்கடை திறக்கப்பட்டு விற்பனை நடந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் மதுக்கடை திறந்ததை கண்டிக்கிறோம். இப்பகுதியில் பள்ளி, கல்லூரி, மாணவர் நல விடுதி உள்ளிட்டவைகள் உள்ளன. இங்கு மதுக்கடை திறந்துள்ளதால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். எனவே, பெண்களின் நலன்கருதி இங்கு அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் மதுக்கடையை மூடும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். 

Next Story