பட்டினப்பாக்கத்தில் தறிகெட்டு ஓடிய கார், அடுத்தடுத்து 3 மோட்டார் சைக்கிள்-கார் மீது மோதல்


பட்டினப்பாக்கத்தில் தறிகெட்டு ஓடிய கார், அடுத்தடுத்து 3 மோட்டார் சைக்கிள்-கார் மீது மோதல்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:02 PM GMT (Updated: 6 Aug 2018 10:05 PM GMT)

பட்டினம்பாக்கத்தில் தறிகெட்டு ஓடிய கார் அடுத்தடுத்து 3 மோட்டார் சைக்கிள்கள், சரக்குவேன், கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். காரை ஓட்டி வந்த வக்கீலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

அடையாறு,

சென்னை பட்டினம்பாக்கத்தில் நேற்று மாலை சாந்தோமில் இருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்ற ஒரு கார் எம்.ஆர்.சி நகர் பஸ்நிலையம் அருகே வந்த போது திடீரென முன்னால் சென்ற ஒரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களையும் இடித்து தள்ளி, ஒரு சரக்கு வாகனத்தையும் இடித்து விட்டு நின்றது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காயம் அடைந்த மயிலாப்பூரை சேர்ந்த அருண் பிரகாஷ் (வயது25), பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த இளையராஜா (39), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (39), கீழ்ப்பாக்கம் கார்டனை சேர்ந்த மார்கரேட் (28), ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அமீர் ஜஹான் (35) மற்றும் அபுபக்கர் ஆகிய 6 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அடையாறு போக்குவரத்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய நபரை பிடித்து, காரை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியவர் துரைப்பாக்கத்தை சேர்ந்த வக்கீலான பென்ஸ் ரீகன் (37) என்பது தெரியவந்தது, அவரை கைது செய்த போலீசார் அவர் குடிபோதையில் காரை ஒட்டி வந்தரா? என்பது குறித்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

Next Story