திருச்செந்தூர் சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழா திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு


திருச்செந்தூர் சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழா திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
x
தினத்தந்தி 7 Aug 2018 9:30 PM GMT (Updated: 7 Aug 2018 2:02 PM GMT)

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தண மாரியம்மன் கோவில் கொடை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தண மாரியம்மன் கோவில் கொடை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.

கோவில் கொடை விழா

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தண மாரி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, கடந்த 5–ந் தேதி இரவு ஜெய விநாயகர், சந்தணமாரி அம்மனுக்கு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் ஜெய விநாயகர், சந்தண மாரி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 9 மணிக்கு திரளான பக்தர்கள் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் உலா வந்து, மீண்டும் கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து விநாயகர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, அலங்கார தீபாராதனையும், இரவு 7 மணிக்கு முளைப்பாரி வீதி உலாவும் நடந்தது. கொடைவிழா காலங்களில் பக்தர்களுக்கு காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று சிறப்பு தீபாராதனை

இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்கு படைப்பு அன்னதானம் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் கும்பம் வீதி உலாவும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி கடலில் பிரி செலுத்துதல் நடைபெறுகிறது. நாளை(வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

விழா நாட்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் வில்லிசை, கரகாட்டம், பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர், உயர்நிலை கமிட்டி ஆலோசகர்கள், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story