மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம்


மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2018 10:45 PM GMT (Updated: 7 Aug 2018 7:09 PM GMT)

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர்,

மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி, ஓசூரில், மாவட்ட ஆட்டோ சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் சேதுமாதவன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட தலைவர் வாசுதேவன், துணைத்தலைவர்கள் பாபு, மகேந்திரன் மற்றும் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும். ஆட்டோ வாரியத்தை செயல்படுத்த வேண்டும். ஏழை ஆட்டோ தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல், ஓசூர் சுபாஸ் சந்திரபோஸ் மேக்சிகேப் உரிமையாளர், ஓட்டுனர் சங்கத்தின் சார்பில், ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் கார்த்திக் வரவேற்றார். இதில், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில அமைப்புசாரா மற்றும் கட்டுமான திராவிடர் தொழிலாளர் சங்க நிர்வாகி வனவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் மஞ்சு, பொருளாளர் மாதேஷ், துணைத்தலைவர் நவீன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். 

Next Story