நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் விரிசல்; 2 ரெயில்கள் தப்பின நாசவேலையா? போலீசார் விசாரணை


நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் விரிசல்; 2 ரெயில்கள் தப்பின நாசவேலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Aug 2018 11:15 PM GMT (Updated: 7 Aug 2018 7:16 PM GMT)

நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் 2 ரெயில்கள் தப்பின. இதற்கு காரணம் நாசவேலையா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளையில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில்கள் மட்டும் நின்று செல்லும். நேற்று காலை 7.15 மணி அளவில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் ரெயிலுக்காக காத்திருந்தனர்.

அப்போது நெல்லைக்கு செல்லும் பாதையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதை ரெயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர் கண்டார். அவர் ரெயில் நிலையத்தில் நின்ற மற்ற பயணிகளிடம் கூறினார். இதனால் தோவாளை ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அங்கு பணியில் இருந்த ஊழியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு புறப்பட்ட பயணிகள் ரெயில் தோவாளை ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. தோவாளையில் பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் துரிதமாக செயல்பட்டார். தண்டவாளத்தின் குறுக்கே சிவப்பு கொடியை கட்டி ரெயிலை நிறுத்தினார். தொடர்ந்து, ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர். தண்டவாளத்தில் ஏற்பட்டு இருந்த விரிசலை தற்காலிகமாக சரி செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக கோவை பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இதே போல பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயில், வள்ளியூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த ரெயில் வழக்கமாக காலை 7.50 மணிக்கு கோட்டார் ரெயில் நிலையத்துக்கு வரும். ஆனால் நேற்று தண்டவாள விரிசல் காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக 8.30 மணிக்கு வந்தது. ரெயில் தண்டவாளம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டதால் அந்த வழியாக இயக்கப்பட்ட ரெயில்கள் மெதுவாகவே இயக்கப்பட்டன. மேலும் நாகர்கோவில் சந்திப்பில் இருந்து நெல்லை மார்க்கமாக சென்ற ரெயில்களும், நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் தோவாளைக்கு விரைந்து வந்தனர். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தண்டவாள விரிசலுக்கான காரணத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

பருவநிலை மாற்றத்தால் இந்த விரிசல் ஏற்பட்டதா? அல்லது ஏதாவது மர்மநபர்களின் நாசவேலையா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அத்துடன் அந்த வழியாக இயக்கப்பட்ட கோவை பயணிகள், பெங்களூரு ரெயில் ஆகிய இரண்டு ரெயில்களும் விபத்தில் இருந்து தப்பின. 

Next Story