சாலை போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் சுற்றுலா வாகனங்கள் ஓடவில்லை


சாலை போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் சுற்றுலா வாகனங்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 7 Aug 2018 11:04 PM GMT (Updated: 7 Aug 2018 11:04 PM GMT)

மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் சாலை போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் சுற்றுலா வாகனங்கள் ஓடவில்லை.

சேலம்,


மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்ககேட் வசூலை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் வாகன அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி சேலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று காலை சாலை போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சேலம் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர். தொடர்ந்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

புதிதாக கொண்டு வரப்படும் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டால், அனைத்து வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்படுவார்கள். அதே போன்று வாகன உரிமையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். சிறிய அளவில் விபத்து ஏற்பட்டாலும் கூட உடனடியாக ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். காப்பீட்டு தொகை, பெர்மிட் ஆகியவற்றின் கட்டணம் உயர்ந்து விடும். 15 ஆண்டுகள் ஆன வாகனங்கள் தகுதி நீக்கம் செய்ய முடியும். எனவே அனைத்து விதத்திலும் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த புதிய சட்ட மசோதாவை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் முருகராஜ், சி.ஐ.டி.யு. பொது செயலாளர் செல்வகுமார், பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் சங்க பொது செயலாளர் மனோகரன், தேசிய முற்போக்கு தொழிலாளர் பேரவை தலைவர் பெருமாள், அம்பேத்கர் தொழிலாளர் முன்னணி பொது செயலாளர் கண்ணன் மற்றும் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போன்று சேலம் மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உடையாப்பட்டி அருகே கார், டூரிஸ்ட் வேன்களை நிறுத்தி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் நேற்று அதிகமான டூரிஸ்ட் வேன்கள், கார்கள் ஓடவில்லை. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோக்கள் மட்டும் ஓடவில்லை. பல ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.

இதே போல எடப்பாடியில் சுற்றுலா வாகனங்கள் உள்பட தனியார் வாகன ஓட்டிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா வாகனங்கள் ஓடவில்லை. மேலும் வாகன டிரைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story