கருணாநிதி உருவப்படத்துக்கு தொண்டர்கள் அஞ்சலி அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் ரோந்து


கருணாநிதி உருவப்படத்துக்கு தொண்டர்கள் அஞ்சலி அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் ரோந்து
x
தினத்தந்தி 7 Aug 2018 11:11 PM GMT (Updated: 7 Aug 2018 11:11 PM GMT)

கருணாநிதி உருவப்படத்திற்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமயபுரம்,

கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. தி.மு.க.வினர் கருப்பு பட்டை அணிந்து துக்கம் அனுசரித்தனர். சமயபுரம் நகர தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூறாவளி பிச்சை, முன்னாள் நகர செயலாளர் துரைசார்லஸ் அலெக்ஸ்நம்பி ஆகியோர் தலைமையில் கூடிய தி.மு.க.வினர், சட்டையில் கருப்பு பட்டை அணிந்து அங்கிருந்து ஊர்வலமாக வந்து கடைவீதியில் உள்ள தி.மு.க. கொடிக்கம்பத்தில் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர். மேலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். கருணாநிதி மறைவை தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை நேற்று குறைவாகவே இருந்ததால், கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

எதுமலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு பட்டை அணிந்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் திருப்பைஞ்சீலி, நொச்சியம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் இன்றைக்்கு(புதன்கிழமை) தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் மும்முரம் காட்டியதால், நேற்று மாலை வணிக வளாகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மேற்பார்வையில் போலீசார் கடைவீதி, நாலுரோடு, சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மண்ணச்சநல்லூரில் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலும், சிறுகனூரில் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசாரும் அந்தந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றியங்களில் உள்ள பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. பெட்ரோல் பங்குகளும் செயல்படவில்லை. டாஸ்மாக் கடைகளும் மாலையிலேயே மூடப்பட்டது. சாலையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

மணப்பாறை நகர பகுதியில் பல்வேறு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் கண்காணித்து வருகின்றனர்.

கருணாநிதி மறைவையொட்டி உப்பிலியபுரம் அண்ணாசிலை அருகே தி.மு.க பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிய செயலாளர் எல்.பி.ராஜசேகரன் தலைமையில் தி.மு.க. கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட்டு அஞ்சலி செலுத்தினர். உப்பிலியபுரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

முசிறி, தா.பேட்டை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. தி.மு.க. கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ஒருசில பஸ்கள் மட்டுமே சென்று வந்ததால் வேலை முடிந்து வீடுகளுக்கு செல்லும் பயணிகள் வெகுநேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பல இடங்களில் அவரது உருவப்படத்துக்கு தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். 

Next Story