மத்திய அரசு சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சியில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசு சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சியில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2018 11:19 PM GMT (Updated: 7 Aug 2018 11:19 PM GMT)

மத்திய அரசு சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சியில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை.

திருச்சி,

மத்திய அரசு சாலைப்போக்குவரத்து மோட்டார் வாகன சட்டத்தில் 71 திருத்தங்களை செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத்தின்படி புதிய வாகனங்கள் பதிவு, ஓட்டுனர் உரிமம் வழங்குதல் போன்ற அதிகாரங்கள் மாநில அரசிடம் இருந்து தனியாரிடம் ஒப்படைக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறியும், எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோரியும் ஆகஸ்டு 7-ந்தேதி இந்தியா முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பின்படி நேற்று சாலைபோக்குவரத்து தொழிலாளர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொ.மு.ச, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் மறியல் செய்வதற்காக திரண்டு நின்றனர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சம்பத் மற்றும் மோட்டார் வாகனங்கள் பழுது நீக்கும் சங்க நிர்வாகிகள், சுற்றுலா வேன் டிரைவர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைப்போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் திருச்சியில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. சுற்றுலா வேன்களும் ஓடவில்லை. 

Next Story