தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைகள் அடைப்பு பஸ்கள் ஓடவில்லை


தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைகள் அடைப்பு பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 7 Aug 2018 11:29 PM GMT (Updated: 7 Aug 2018 11:29 PM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையொட்டி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பஸ்கள் ஓடவில்லை.

திருவாரூர்,

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான மு.கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி கருணாநிதி மரணமடைந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் திருவாரூர் நகரமே சோகத்தில் முழ்கியது. இதனையடுத்து திருவாரூரில் உள்ள கடைகள் அனைத்து அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை. எந்த நேரத்திலும் பரபரப்பான காணப்படும் காய்கறி மார்கெட், நகை கடை சந்து அனைத்து மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டன.

அரசு பஸ்கள் அனைத்து திருவாரூர் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் செய்து அறியாமல் திகைத்தனர். பஸ்கள் எதுவுமின்றி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. சினிமா தியேட்டர்கள் இரவு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளில் இருந்து மாணவ–மாணவிகள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டனர். டாஸ்மாக் கடைகள் அனைத்து 6 மணிக்கு மூடப்பட்டன. தெரு விளக்குகள் அனைத்து சற்று செயல் இழந்து நகரமே இருளில் முழ்கியது. இதே போல திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் அலைமோதியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அனைவரும் ரெயிலில் சென்றனர். இதனால் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பலர் ரெயில் டிக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் அனைத்து இடங்களிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் என்பதால், அவருடைய பிரிவை தாங்க முடியாமல் திருவாரூர் நகரமே சோகத்தில் முழ்கி ஸ்தம்பித்தது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன.

தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டப்பட்டன. பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல நாகை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை.


Next Story