கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

ஆரணியில் நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஆரணி,
ஆரணி அருணகிரிசத்திரம் பாட்ஷா தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் ராகுல் (வயது 19). செய்யாறில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் இவர் தனது நண்பர்களான சைதாப்பேட்டையை சேர்ந்த கார்த்தி (18), லோகநாதன் (18), அருணகிரிசத்திரத்தை சேர்ந்த சதீஷ் (18) ஆகியோருடன் ஆரணி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.
ராகுல் நீச்சல் தெரியாததால் தனது உடலில் ரப்பர் டியூப்பை கட்டிக்கொண்டு குளித்தார். அப்போது திடீரென்று டியூப் விலகிவிட்டதால் அவர் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார்.
இதை பார்த்த மற்ற 3 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதைத்தொடர்ந்து ஆரணி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய ராகுலை தேடினர். சுமார் ½ மணி நேர தேடுதலுக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீசார் சென்று பார்வையிட்டு ராகுல் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story