மாவட்டம் முழுவதும் கருணாநிதிக்கு பொதுமக்கள், அனைத்து கட்சியினர் அஞ்சலி


மாவட்டம் முழுவதும் கருணாநிதிக்கு பொதுமக்கள், அனைத்து கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 8 Aug 2018 10:30 PM GMT (Updated: 8 Aug 2018 10:09 PM GMT)

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு பொதுமக்கள், அனைத்து கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தர்மபுரி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று முன்தினம் மாலை உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சோகத்தில் மூழ்கினார்கள். தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோர பகுதிகள், தெருக்களில் தி.மு.க.வினர் கண்ணீர் அஞ்சலி பேனர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலையோர பகுதிகள் மற்றும் தெருக்களில் கருணாநிதியின் உருவப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தர்மபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பெண்கள் ஒப்பாரி வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் இலக்கியம்பட்டி வி.பி.சிங் தெரு பகுதியில் தி.மு.க. மூத்த நிர்வாகி குழந்தை தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுந்தரம், பாலாஜி, மோகன்ராஜ், சேகர், கங்கா, மணி, சோபியா உள்பட குடியிருப்புவாசிகள், பொதுமக்கள், சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தர்மபுரி எம்.ஜி.ஆர். நகரில் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சென்று அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கருணா நிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் மோகன் தலைமையில், தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் தர்மபுரி நகராட்சி 25, மற்றும் 26-வது வார்டு தி.மு.க. கிளை சார்பில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி முல்லைவேந்தன் தலைமையில் பாலசுப்பிர மணியம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் சாலை பணியாளர் சங்கத்தினர் மாநில தலைவர் பெரியசாமி தலைமையில் தர்மபுரியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசுஊழியர் சங்கங்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story