கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த முக்கிய பிரமுகர்களால் சென்னை விமான நிலையம் திணறியது


கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த முக்கிய பிரமுகர்களால் சென்னை விமான நிலையம் திணறியது
x
தினத்தந்தி 8 Aug 2018 11:30 PM GMT (Updated: 8 Aug 2018 10:19 PM GMT)

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த முக்கிய பிரமுகர்களால் சென்னை விமான நிலையம் திணறியது. விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஆலந்தூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. மறைந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் தனி விமானத்தில் சென்னை வந்தனர்.

விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு கடற்படைத்தளத்துக்கு சென்று, அங்கிருந்து கார் மூலம் ராஜாஜி மண்டபத்துக்கு சென்ற பிரதமர், கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மதியம் 12.15 மணிக்கு பிரதமர் மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் மீண்டும் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 12.40 மணியளவில் டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார்.

கேரள மாநில கவர்னர் சதாசிவம், முதல்-மந்திரி பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ்சென்னிதலா ஆகியோரும் தனி விமானத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்தனர்.

முன்னதாக மதியம் 12.30 மணியளவில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், 1 மணியளவில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், 1.30 மணியளவில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த்கெஜ்ரிவால் ஆகியோரும் விமானம் மூலம் சென்னை வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோரும் விமானத்தில் சென்னை வந்தனர்.

மதியம் 3 மணியளவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக்அப்துல்லா ஆகியோர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தனர்.

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ்யாதவ், பீகார் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் இலங்கை அமைச்சர்கள் மனோகணேசன், ராதா கிருஷ்ணன் ஆகியோரும் விமானம் மூலம் சென்னை வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று அதிகாலை முதலே முக்கிய பிரமுகர்கள் சென்னை விமான நிலையம் வந்ததாலும், அவர்களை வரவேற்கவும், வழியனுப்பி வைக்கவும் பாதுகாப்பு அதிகாரிகள் குவிந்ததாலும் சென்னை விமான நிலையம் திணறியது.

முக்கிய பிரமுகர்கள் வருகையையொட்டி விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். விமான நிலையம் முழுவதும் மோப்ப நாயுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

Next Story