மாவட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம்


மாவட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2018 9:45 PM GMT (Updated: 9 Aug 2018 7:58 PM GMT)

மாவட்டத்தில் 5 தபால் நிலையங்களில் இந்திய தபால் நிலைய செலுத்து வங்கி திட்டம் வருகிற 21-ந்தேதி முதல் செயல்பட தொடங்குகிறது.

தேனி,

வங்கி நடைமுறைகள் மற்றும் நிதி சேவைகள் அனைத்தும் கிராமப்புறங்களையும் சென்றடையும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தபால் நிலையங்களில் வங்கி சேவையை தொடங்க திட்டமிடப்பட்டது. ‘இந்திய தபால் நிலைய செலுத்து வங்கி’ (ஐ.பி.பி.பி.) எனப்படும் இந்த திட்டம் வருகிற 21-ந் தேதி தொடங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அத்துடன் ஐ.பி.பி.பி. என்ற செல்போன் செயலியையும் அவர் அறிமுகம் செய்து வைக்கிறார். நாடு முழுவதும் முதற்கட்டமாக 650 கிளைகள் செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், கோடாங்கிபட்டி, அன்னஞ்சி, அம்மச்சியாபுரம் ஆகிய 5 இடங்களில் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டத்தின்கீழ் இந்திய தபால் நிலைய செலுத்து வங்கி தொடங்கப்பட உள்ளது.

பிரதமர் தொடங்கி வைத்து பேசும் விழாவில் இத்திட்டங் கள் செயல்படுத்தப்பட உள்ள அனைத்து தபால் நிலையங் களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற் கான ஏற்பாடுகளை தபால் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். அதன்படி தேனி மாவட்டத்தில் 5 இடங் களிலும் பெரிய அளவிலான டிஜிட்டல் திரையில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

இந்த தபால் நிலைய வங்கிகளில், பிற வங்கிகளில் இருப்பது போல அனைத்து சேவைகளும் நடைபெறும். குறிப்பாக ரூ.1 லட்சம் வரையிலான வைப்புத் தொகை பெற்றுக்கொள்ளுதல், எந்த வங்கி கணக்குக்கும் பணப்பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட நிதி சேவைகளும், செல்போன் மூலம் பணப்பரிவர்த்தனை போன்ற டிஜிட்டல் சேவைகளும் இந்த வங்கிகள் மூலம் பெற முடியும்.

இதைப்போல தொலைபேசி, மின்சாரம், டி.டி.எச். கட்டணம் மற்றும் கல்லூரி கட்டணம் உள்ளிட்டவையும் செலுத்த முடியும். மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், மானியங்கள், ஓய்வூதியம் போன்ற அரசின் பணப்பலன்களும் இந்த வங்கி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இத்தகவலை தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

Next Story