நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1¾ லட்சம் வழிப்பறி வாலிபர் கைது


நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1¾ லட்சம் வழிப்பறி வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Aug 2018 9:54 PM GMT (Updated: 9 Aug 2018 9:54 PM GMT)

நிதி நிறுவன ஊழியரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.1¾ லட்சத்தை வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, 



மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் அசோக்குமார் (வயது 24). இவர் மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், மோட்டார் சைக்கிளில் பணம் வசூல் செய்வதற்காக சென்றார். ஒத்தக்கடை அருகே உள்ள பட்டணம், ஜோதியபட்டி, பஞ்சாங்கி பட்டி, கட்ட முத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பணம் வசூல் செய்துவிட்டு மீண்டும் ஒத்தக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கண்டமுத்துபட்டி-சின்னமங்கலம் சந்திப்பு பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அசோக்குமாரிடம் செல்போனை தருமாறு மிரட்டி உள்ளனர். இதற்கு அவர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்மநபர்கள், அவரை தாக்கி அவர் வைத்திருந்த பணப்பை மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். அந்த பையில் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 100 இருந்ததாக அசோக்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த பிரவீன் (20), முருகானந்தம் (19) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தலைமறைவாக இருந்த முருகானந்தத்தை கைது செய்தனர். பிரவீனை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை புறநகர் பகுதி களான ஒத்தக்கடை, ஊமச்சிகுளம், சிலைமான் பகுதிகளில் நாளுக்கு நாள் வழிப்பறி சம்பவங்கள் அதிரித்து வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் வழிப்பறி சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story