குமரி மாவட்டத்தில் பரவலாக மழை அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


குமரி மாவட்டத்தில் பரவலாக மழை அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2018 11:00 PM GMT (Updated: 9 Aug 2018 9:55 PM GMT)

குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையில் கன்னிமார் பகுதியில் 52.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 2965 கன அடி தண்ணீர் வருகிறது.

நாகர்கோவில்,

தென்மேற்கு பருவமழையையொட்டி குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது. பரவலாக பெய்ததால் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. நேற்று காலையிலும் சாரல் மழை இருந்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்ட பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 46.2, பெருஞ்சாணி- 39, சிற்றார் 1- 52, சிற்றார் 2- 31, மாம்பழத்துறையாறு- 30, புத்தன் அணை- 41.2, பூதப்பாண்டி- 22.4, களியல்-15, கன்னிமார்- 54.2, கொட்டாரம்- 22.6, குழித்துறை- 37.4, மயிலாடி- 9.6, நாகர்கோவில்-10.8, சுருளகோடு- 43.2, தக்கலை- 22, குளச்சல்- 14, இரணியல்- 19.6, பாலமோர்- 47.2, ஆரல்வாய்மொழி- 6, கோழிப்போர்விளை- 31, அடையாமடை- 23, குருந்தங்கோடு- 14.6, முள்ளங்கினாவிளை- 36, ஆனைக்கிடங்கு- 28.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

இந்த மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,466 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 762 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,137 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 285 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சிற்றார்-1 அணைக்கு 200 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-2 அணைக்கு 148 கன அடி தண்ணீர் வருகிறது. பொய்கை அணைக்கு 2 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 12 கன அடி தண்ணீரும் வருகிறது. மாம்பழத்துறையாறு அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. மொத்தத்தில் குமரி மாவட்ட அணைகளுக்கு 2,965 கன அடி தண்ணீர் வருகிறது. தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Next Story