திருவண்ணாமலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருவண்ணாமலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Aug 2018 10:45 PM GMT (Updated: 10 Aug 2018 9:30 PM GMT)

திருவண்ணாமலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு வரதட்சணை கொடுமையே காரணம் என தாயார் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வி.ஓ.சி. நகரை சேர்ந்தவர் தரணிதரன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனம் (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தரணிதரன், மனைவி தனத்திடம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கம் இளையான்குன்னி கிராமத்தில் வசிக்கும் தனத்தின் தாய் ஜெயந்தி திருவண்ணாமலைக்கு வந்து கணவன், மனைவியை சமாதானம் செய்து வைத்துவிட்டு சென்று உள்ளார். கடந்த 8-ந் தேதி இரவு 9 மணி அளவில் தனம் அவரது தாய் ஜெயந்தியிடம் போனில் பேசி உள்ளார். அப்போது தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தரணிதரன், மாமியார் ஜெயந்திக்கு போன் செய்து உங்கள் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெயந்தி திருவண்ணாமலை டவுன் போலீசில் கொடுத்துள்ள புகாரில், தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய மருமகன் தரணிதரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட தனத்திற்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேலு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story