மாநகர பஸ் பிறந்தநாள்: டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல் கல்லூரி மாணவர்கள் 10 பேர் கைது


மாநகர பஸ் பிறந்தநாள்: டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல் கல்லூரி மாணவர்கள் 10 பேர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2018 10:20 PM GMT (Updated: 10 Aug 2018 10:20 PM GMT)

மாநகர பஸ்சை மறித்து பிறந்தநாள் கொண்டாடியதை தட்டிக்கேட்ட டிரைவர், கண்டக்டரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர்,

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பட்டாபிராமுக்கு நேற்று முன்தினம் மாலை மாநகர பஸ்(தடம் எண் 40ஏ) சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் பால்பாண்டி(வயது 30) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக வயனபெருமாள்(51) என்பவர் பணியில் இருந்தார்.

அந்த பஸ்சில் அமைந்தகரையில் உள்ள ஒரு கல்லூரியைச்சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்தனர். அம்பத்தூர் சிங்கப்பூர் காம்ப்ளக்ஸ் பஸ் நிறுத்தத்தில் மாநகர பஸ் நின்றது. உடனே பஸ்சில் இருந்த கல்லூரி மாணவர்கள் கீழே இறங்கி, பஸ்சின் முன்புறம் சென்று மாணவர் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

அத்துடன் பஸ்சை அங்கிருந்து செல்லவிடாமல் மறித்தபடி தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, ரகளை செய்தனர். இதை பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள், அருகில் இருந்த பொதுமக்கள் தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் மாநகர பஸ் டிரைவர் பால்பாண்டி, கண்டக்டர் வயனபெருமாள் இருவரையும் தாக்கினர். உடனே பஸ்சில் இருந்த பயணிகள், செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற அம்பத்தூர் போலீசார், அங்கு ரகளையில் ஈடுபட்டதுடன், மாநகர பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கியதாக கல்லூரி மாணவர்களான அஜித்(19), விக்னேஷ்(20), விஜயகுமார்(21), சஞ்சய்குமார்(19) உள்பட 10 பேரை கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய ஒரு மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபற்றி டிரைவர் பால்பாண்டி அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story