போலீசார் சோதனை: கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது


போலீசார் சோதனை: கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2018 11:00 PM GMT (Updated: 11 Aug 2018 3:17 PM GMT)

ஆரல்வாய்மொழியில் போலீசார் நடத்திய சோதனையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையொட்டி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் வழியாக ரே‌ஷன் அரிசி, மணல், மண்எண்ணெய் போன்றவை கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க சோதனை சாவடிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும், வருவாய்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று காண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நேற்று அதிகாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கூண்டு கட்டப்பட்ட டெம்போ வந்தது. போலீசார் அதை தடுத்து நிறுத்தினர். பின்னர் டிரைவரிடம், ‘வண்டியில் என்ன  இருக்கிறது?’ என்று கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் டெம்போவை சோதனையிட்ட போது, 75 மூடைகளில் 3 டன் ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வண்டியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஏழுதேசம் பகுதியை சேர்ந்த சுனில் குமார் (வயது 35) என்பதும், இந்த ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் சுனில் குமாரை போலீசார் கைது செய்து, அரிசி மூடைகளையும், டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இதில் தொடர்பு உடையவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story