ஆடி அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்


ஆடி அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றில்  தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்
x
தினத்தந்தி 11 Aug 2018 10:30 PM GMT (Updated: 11 Aug 2018 4:32 PM GMT)

ஆடி அமாவாசையையொட்டி குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.

குழித்துறை,

குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில், நீண்ட காலமாக முன்னோர் நினைவாக பலி தர்ப்பணம் நிகழ்ச்சி  நடந்து வருகிறது. பலிதர்ப்பணம் நிறைவேற்றி செல்பவர்கள் முன்னோர் நினைவாக தென்னை, மா, பலா போன்ற மரக்கன்றுகளை வாங்கி சென்று வீடுகளில் நட்டு வந்தனர். நாளடைவில் ஆடி அமாவாசை தினத்தன்று பலிதர்ப்பணம் நிறைவேற்றும் நாளில் கூட்டம் அதிகரித்ததால் அது  வாவுபலி சந்தையாக மாறியது.

பின்னர் குழித்துறை நகராட்சி சார்பில் அந்த நாள் வாவுபலி பொருட்காட்சியாக நடத்தப்பட்டது. அங்கு விவசாய கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கண்காட்சிகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் நடந்த பொருட்காட்சி தற்போது 20 நாட்கள் நடத்தப்படுகிறது.

93–வது வாவுபலி பொருட்காட்சி கடந்த மாதம் 27–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் நிறைவுவிழா வருகிற 15– ந் தேதி நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று வாவுபலி சந்தை நடந்தது.

 ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று குமரி மாவட்டம் மற்றும் கேரள எல்லை பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் குழித்துறை தாமிரபரணி ஆற்றின்கரையில் குவிந்தனர். அவர்கள் தங்கள் முன்னோர் நினைவாக  தர்ப்பணம் செய்தனர்.

இதற்காக குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் பல புரோகிதர்கள் பலி கர்ம பொருட்களான பொங்கல், பச்சரிசி, தெற்றிப் பூ, அறுகம்புல், கடுகு போன்ற பொருட்களுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால்,  தர்ப்பணம் நிறைவேற்றுபவர்கள் ஆற்றில் குளித்து ஈரத்துணியுடன் வந்து முட்டு போட்டு அமர்ந்தனர். உடனே, புரோகிதர்கள் மந்திரம் ஓதி,  வாழை இலையில் பலிதர்ப்பண பொருட்களை வைத்து தலையில் கொடுத்து அனுப்பினர். தர்ப்பணம் நிறைவேற்றுபவர்கள் வாழை இலையில் பூஜை பொருட்களை தலையில் சுமந்தவாறு ஆற்றுக்குள் சென்று மூழ்கி அவற்றை ஆற்றில் மிதக்க விட்டனர்.

இந்த நிகழ்ச்சி நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும்  வாவுபலி சந்தையை முன்னிட்டு ஏராளமானோர் பொருட்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.

 சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்திருந்த வேத விற்பன்னர்கள் முன்பு அமர்ந்து பலிகர்ம பூஜை செய்தனர். பின்னர் பலி கர்ம பொருட்களை தலையில் சுமந்து சென்று கடலில் மூழ்கி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர், புனித நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு  சென்று வழிபட்டனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு தங்க கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.

திற்பரப்பு அருவியில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜை நடத்தி தர்ப்பணம் செய்தனர். திற்பரப்பு அருவியில் தற்போது அதிக தண்ணீர் கொட்டுவதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அருவியில் கீழ் பகுதியில் ஆற்றின் கரையோரம் பக்தர்கள் அமர்ந்து பூஜைகள் செய்தனர். பின்னர், ஆற்றில் இறங்கி நீராடி  தர்ப்பணம் நிறைவேற்றினர்.

Next Story