ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 11 Aug 2018 10:30 PM GMT (Updated: 11 Aug 2018 8:35 PM GMT)

ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகின்றன.

நேற்று ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தயிர், எண்ணெய், பஞ்சாமிர்தம் மற்றும் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் நாமக்கல் மட்டும் இன்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு, சாமிதரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் நேற்று நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story