கூட்டுறவு சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரிடையே வாக்குவாதம்


கூட்டுறவு சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரிடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 11 Aug 2018 10:45 PM GMT (Updated: 11 Aug 2018 9:45 PM GMT)

சோமரசம்பேட்டை கூட்டுறவு சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் நடைபெறவில்லை.

சோமரசம்பேட்டை,

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் அதிகாரிகளால் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி சோமரசம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி நேற்று காலை கூட்டுறவு சங்கத்திற்கு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் வந்தனர். இதில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த பால்ராஜ் என்பவர் போட்டியிடுவதாக கூறப்பட்டது. அவரை எதிர்த்து அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வராஜ் என்பவர் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.

இதனால் அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் வாக்களிக்க வேண்டிய சங்க உறுப்பினர்கள் 11 பேரில் 6 பேர் மட்டும் வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சங்கத்தின் வெளிப்பக்க கதவுகள் திடீரென மூடப்பட்டு பூட்டு போடப்பட்டது. பின்னர் சோமரசம்பேட்டை போலீசார் வரவழைக்கப்பட்டு, சங்கத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் இயக்குனர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் அங்கு திரண்டதால், தேர்தல் அதிகாரி சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அறிவித்து கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்த முடியவில்லை என்று கூறி திரும்பி சென்றார்். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் பற்றி மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story