செம்பட்டி அருகே, முன்விரோதத்தில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை


செம்பட்டி அருகே, முன்விரோதத்தில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 11 Aug 2018 11:15 PM GMT (Updated: 11 Aug 2018 10:52 PM GMT)

செம்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செம்பட்டி,

செம்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வராஜ் (வயது 55). ஒன்றிய தி.மு.க. பிரதிநிதியான இவர் குளங்களை குத்தகைக்கு எடுத்து மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய தம்பி பொன்னையாவின் மருமகள் வாணி (24). இவர், கடந்த மார்ச் மாதம் நடந்த கோவில் விழாவில் நடனம் ஆடியுள்ளார். இதனை செல்வராஜ் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்வராஜ், அவருடைய மனைவி லட்சுமி ஆகியோரிடம், அதே ஊரை சேர்ந்த அவர்களுடைய உறவினர்களான அய்யப்பன், அவருடைய தம்பி அதிவீரபாண்டியன் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதைத்தொடர்ந்து இரு குடும்பங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இரு தரப்பையும் அழைத்து சமாதானம் செய்தனர்.

இந்தநிலையில், நேற்று காலை சுமார் 6.30 மணிக்கு செல்வராஜின் வீட்டுக்கு அய்யப்பன், அதிவீரபாண்டியன் உள்பட 6 பேர் வந்துள்ளனர். அவர்கள் செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில், அய்யப்பன் தரப்பினர் செல்வராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதனை பார்த்த செல்வராஜின் உறவினர் சடையாண்டி, அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடையாண்டியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் நேரில் பார்வையிட்டார். சம்பவம் குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story