உத்தவ் தாக்கரேக்கு பிரதமர் மோடி போனில் நன்றி


உத்தவ் தாக்கரேக்கு பிரதமர் மோடி போனில் நன்றி
x
தினத்தந்தி 12 Aug 2018 12:27 AM GMT (Updated: 12 Aug 2018 12:27 AM GMT)

மாநிலங்களவை துணை தலைவர் தேர்தலில் ஆதரவு தெரிவித்ததற்காக உத்தவ் தாக்கரேக்கு பிரதமர் மோடி போனில் நன்றி தெரிவித்து உள்ளார்.

மும்பை,

மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல் கடந்த 9-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் சிவசேனா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளித்து இருந்தது.

இந்தநிலையில் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு போன் மூலம் நன்றி தெரிவித்து உள்ளார்.

இந்த உரையாடல் குறித்து சிவசேனாவின் அனில் தேசாய் எம்.பி. கூறியதாவது:-

இது மரியாதை நிமித்தமாக நடந்த உரையாடல். 2 பேரும் 5 நிமிடங்கள் தான் பேசியிருப்பார்கள். மாநிலங்களவை துணை தலைவர் தேர்தலில் ஆதரவு தெரிவித்ததற்கு உத்தவ் தாக்கரேக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அப்போது அரசியல் எதுவும் பேசப்படவில்லை. ஏற்கனவே அந்த தேர்தலுக்கு ஆதரவு கேட்டு உத்தவ் தாக்கரேயை அமித்ஷா தொடர்பு கொண்டு இருந்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story