தஞ்சையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து பணம்– நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


தஞ்சையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து பணம்– நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Aug 2018 11:00 PM GMT (Updated: 12 Aug 2018 5:16 PM GMT)

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை– பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜமால்உசேன் நகர் 2–ம் தெரு பாப்பாநகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது37). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய தந்தை ராமையன். தாயார் சேதம்மாள். முருகானந்தத்துக்கு மலர்விழி என்ற மனைவியும், பவித்ரன் என்ற மகனும் உள்ளனர்.

மலர்விழி தனது மாமனார், மாமியார் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஆடிஅமாவாசை என்பதால் ராமையனும், சேதம்மாளும் ஒரத்தநாட்டில் உள்ள கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டனர். இதையடுத்து இரவு மலர்விழியும், பவித்ரனும், அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் இரவு தங்கினர்.

நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசுகள், வீடு கட்டியதற்காக வாங்கிய கடனை கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து ராமையன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story