கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் செல்போன்கள், பணம் திருட்டு


கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் செல்போன்கள், பணம் திருட்டு
x
தினத்தந்தி 12 Aug 2018 9:30 PM GMT (Updated: 12 Aug 2018 6:38 PM GMT)

புளியந்தோப்பில் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு பேரக்ஸ்கேட் சாலையில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் சுனில்(வயது 30). நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று அதிகாலை அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கடையின் உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் சுனில், புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசாருடன் சேர்ந்து கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

அதில், நேற்று முன்தினம் இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 40 புதிய செல்போன்கள், சர்வீஸ் செய்ய வாடிக்கையாளர்கள் கொடுத்த 15 செல்போன்கள் ஆகியவற்றை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. திருட்டுபோன செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆராய்ந்து வருகின்றனர்.

Next Story