முகநூலில் அறிமுகமான நட்பு: காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதால் என்ஜினீயரிங் மாணவி தீக்குளிப்பு மாணவர் கைது


முகநூலில் அறிமுகமான நட்பு: காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதால் என்ஜினீயரிங் மாணவி தீக்குளிப்பு மாணவர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2018 10:15 PM GMT (Updated: 12 Aug 2018 6:49 PM GMT)

முகநூலில் அறிமுகமான நட்பை வைத்து காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதால் என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்தார். இது தொடர்பாக என்ஜினீயரிங் மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேதுராம். இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சேதுராமின் மகள் லக்‌ஷண்யா (வயது19). இவர் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். திருச்சி அரியமங்கலம் பர்மா காலனி நேதாஜி தெருவை சேர்ந்த வினோஜ்குமாரின் மகன் விஷால் (19). இவர் தஞ்சை வல்லத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விஷால் முகநூல் (பேஸ்புக்) மூலம் லக்‌ஷண்யாவிடம் அறிமுகமானார். இவர்கள் இருவரும் முகநூலில் நட்புடன் பழகி வந்தனர். கடந்த ஒரு வருடமாக பேசி, பழகி வந்தனர்.

இந்த நிலையில் லக்‌ஷண்யாவிடம் தன்னை காதலிக்குமாறு விஷால் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. தன்னை காதலிக்காவிட்டால் லக்‌ஷண்யாவையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த லக்‌ஷண்யா நேற்று முன்தினம் வீட்டில் மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

தீயில் வலியால் அலறி துடித்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாணவியின் தந்தை சேதுராம் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகநூலில் அறிமுகமான நட்பை வைத்து காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதால் என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி லக்‌ஷண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story