வடுவூர் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி


வடுவூர் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 12 Aug 2018 11:00 PM GMT (Updated: 12 Aug 2018 7:58 PM GMT)

வடுவூர் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம் வடுவூரில் உள்ளது வடுவூர் ஏரி. இந்த ஏரி பறவைகள் சரணாலயமாக விளங்குகிறது. 320 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதையடுத்து இந்த ஏரியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி முதல் ஜூலை 26-ந் தேதி வரை தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் 4 முதல் 5 அடி ஆழம் வரை தூர்வாரும் பணி நடைபெற்றது.

கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி கல்லணைக்கு தண்ணீர் வந்தது. பின்னர் அன்றைய தினம் கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் வடவாறு விரிவாக்க கால்வாயின் மூலம் கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி வடுவூர் ஏரியினை வந்தடைந்தது. இதனால் வடுவூர் ஏரி நிரம்பியது. தற்போது இந்த ஏரி நிரம்பியதின் மூலம் வடுவூர், தென்பாதி, கட்டக் கடி, பேரையூர், எட மேலையூர், எட அன்னவாசல், மூவாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவார்கள். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வடுவூர் ஏரி தற்போது நிரம்பி உள்ளது. தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் நீர் மட்டம் குறையாமல் உள்ளது. ஆதலால் வடுவூர் ஏரி பார்ப்பதற்கு கடல் போல் காட்சி அளிக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிகளவிலான தண்ணீர் ஏரியில் சேமிக்கப்பட்டு இருப்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு பறவையினங்கள் இந்த ஏரிக்கு வருவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு தற்போது ரம்மியமான சூழ்நிலை காணப்படுவதால் வெளிநாட்டு பறவைகள் முன் கூட்டியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏரியின் அழகை கண்டு ரசிப்பதற்காக பார்வையாளர் மாடம் மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வடுவூர் ஏரியின் அழகை இப்பகுதி மக்கள் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களும் வந்து ரசித்து செல்கின்றனர். மேலும் வெளிநாட்டினரும், சுற்றுலா பயணிகளும் வடுவூர் ஏரிக்கு தினமும் வருகின்றனர். இந்த ஏரியில் தண்ணீர் வற்றிய பிறகு மீண்டும் தூர்வாரி ஆழப்படுத்தினால் இன்னும் நிறைய தண்ணீரை சேமிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story