மணவாசி திருநங்கைநகர் சக்திமாரியம்மன் கோவில் திருவிழா திருநங்கைகள் அக்னி சட்டி எடுத்தனர்


மணவாசி திருநங்கைநகர் சக்திமாரியம்மன் கோவில் திருவிழா திருநங்கைகள் அக்னி சட்டி எடுத்தனர்
x
தினத்தந்தி 12 Aug 2018 10:30 PM GMT (Updated: 12 Aug 2018 8:39 PM GMT)

மணவாசி திருநங்கை நகர் சக்திமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் திருநங்கைகள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம் மணவாசி திருநங்கைகள் நகரில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும். திருவிழாவை அப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகளும், பொதுமக்களும் இணைந்து நடத்துவார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது.

10-ந்தேதி காலை திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி மாயனூர் காவிரி ஆற்றுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து புனிதநீர் எடுத்து கோவிலுக்கு வந்தனர். பின்னர் அன்று இரவு அப்பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் கரகம் பாலிக்கப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு புனிதநீர், பன்னீர், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, பட்டாடை உடுத்தி, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காட்டினர்.

நேற்று முன்தினம் காலையில் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு திருநங்கைகளும், பக்தர்களும் அக்னிசட்டி, பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் வந்து அம்மனை வழிபட்டனர். அன்று மாலை முளைப்பாரி எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். நேற்று காலையில் அம்மனுக்கு கூழ் ஊற்றி, சிறப்பு வழிபாடு நடத்தினர். மாலையில் மஞ்சள் நீராடுதலுடன் கரகம் பொதுக்கிணற்றில் விடப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. இத்திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருநங்கைகளின் தலைவி சுஜாதா தலைமையில் கரூர் மாவட்ட திருநங்கைகள் செய்திருந்தனர். 

Next Story