சாலை அமைக்காததை கண்டித்து பஸ் மறியல், கிராமமக்கள் - தி.மு.க. அறிவிப்பு


சாலை அமைக்காததை கண்டித்து பஸ் மறியல், கிராமமக்கள் - தி.மு.க. அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2018 10:15 PM GMT (Updated: 12 Aug 2018 8:49 PM GMT)

சிவகங்கை அருகே கீழ்க்கண்டனியில் இருந்து வேம்பங்குடி வரை சாலை அமைக்காததை கண்டித்து பஸ் மறியல் நடத்தப்போவதாக கிராம மக்கள், தி.மு.க. கட்சியினர் அறிவித்துள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை நகர் தி.மு.க. செயலாளர் துரை ஆனந்த், தெற்கு ஒன்றிய செயலாளர் வேம்பங்குடி எம்.ஜெயராமன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– சிவகங்கையை அருகே கீழ்க்கண்டனியில் இருந்து வேம்பங்குடி வரையிலான தார்ச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. இதையொட்டி அந்த சாலையில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு 3 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.

ஆனால் இன்னும் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை.இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிஉள்ளார்கள்.வாகனங்கள் செல்ல முடியாமல் பெரியோர்கள், கர்ப்பிணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதனால் வேம்பங்குடி, உசிலங்குளம், உடையனாதபுரம், கடுக்காகுளம், மாடக்கோட்டை உச்சப்புளி, வெல்லஞ்சி ஆகிய கிராம மக்கள் பெருமளவில் அவதி அடைந்து வருகின்றனர்.

இதை கண்டித்து வருகிற 20–ந்தேதி காலை 10 மணி அளவில் சிவகங்கை, மானாமதுரை சாலை கீழ்க்கண்டனி பஸ் நிலையத்தில் கிராம மக்கள் சார்பிலும் தி.மு.க. சார்பிலும் பஸ் மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story