மேல்மருவத்தூர் கோவிலில் ஆடிப்பூர விழா பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு


மேல்மருவத்தூர் கோவிலில் ஆடிப்பூர விழா பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Aug 2018 11:15 PM GMT (Updated: 12 Aug 2018 9:13 PM GMT)

மேல்மருவத்தூர் கோவிலில் நடந்த ஆடிப்பூர விழாவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பால் அபிஷேகத்தை தொடங்கிவைத்தார்.

மதுராந்தகம்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவிலில் இன்று (திங்கட்கிழமை) ஆடிப்பூர விழா நடக்கிறது. இதையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் கஞ்சி தயாரிக்கப்படும் கேசவராயன்பேட்டை வளாகத்தில் இருந்து மண் கலயங்களில் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் தொடங்கிவைத்தார்.

சித்தர் பீடத்தின் முகப்பிலும் வளாகத்தை சுற்றிலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கருவறை அன்னைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டன. சித்தர்பீடம் வருகை தந்த பங்காரு அடிகளாருக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். விழா பொறுப்பாளர்கள் அவரை பாதபூஜை செய்து வரவேற்றனர்.

பங்காரு அடிகளார் வீட்டில் இருந்து லட்சுமி பங்காரு அடிகளாரால் எடுத்துவரப்பட்ட தாய் வீட்டு கஞ்சிக்கு இயக்க துணைத்தலைவர் கோ.ப.அன்பழகனால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்னதான பிரசாதம் வழங்குவதை ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார். சித்தர் பீடம் வருகை தந்த மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இயக்கத்தின் துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் மற்றும் கோ.ப.அன்பழகன் ஆகியோர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

பால் அபிஷேகத்தை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story