ஆதார் எண் இணைக்கப்பட்டதால் தெரியவந்தது 6 ஆயிரம் போலி வங்கி கணக்குகள் கண்டுபிடிப்பு


ஆதார் எண் இணைக்கப்பட்டதால் தெரியவந்தது 6 ஆயிரம் போலி வங்கி கணக்குகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2018 8:19 PM GMT (Updated: 13 Aug 2018 8:19 PM GMT)

ஆதார் எண் இணைக்கப்பட்டதால் 6 ஆயிரம் போலி வங்கி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மந்திரி பண்டப்பா காசம்பூர் கூறினார்.

பெங்களூரு,

கூட்டுறவுத்துறை மந்திரி பண்டப்பா காசம்பூர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல் கட்டமாக கூட்டுறவு வங்கிகளில் நடப்பு விவசாய கடனை தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ரூ.9,448 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி வரை கடன் வாங்கி இருப்பவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவார்கள். 20.38 லட்சம் விவசாயிகள் இந்த கடன் தள்ளுபடியின் பலனை பெறுகிறார்கள்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடனாக ரூ.10 ஆயிரத்து 700 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.9,448 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது. ஒரு விவசாயிக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடன் வாங்கிய விவசாயி மரணம் அடைந்திருந்தால், அவருடைய வாரிசுக்கு இந்த பயன் கிடைக்கும்.

அரசு ஊழியர்கள், ரூ.20 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்தும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன் பெற தகுதி இல்லை. போலி வங்கி கணக்குகளை தொடங்கி பினாமி பெயர்களில் பலர் கடன் வாங்கியுள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 6 ஆயிரம் போலி வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ரூ.50 கோடி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சுயஉதவி குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். நடமாடும் கடன் உதவி வழங்கும் திட்டம் அடுத்த மாதம்(செப்டம்பர்) 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு நீண்ட கால வைப்புத்தொகையை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பண்டப்பா காசம்பூர் கூறினார்.

Next Story