திருக்கழுக்குன்றம் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை


திருக்கழுக்குன்றம் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 13 Aug 2018 11:29 PM GMT (Updated: 13 Aug 2018 11:29 PM GMT)

திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்று பகுதியில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றத்தை அடுத்த வள்ளிபுரம் ஆனூர் பாலாற்று பகுதியில் நேற்று ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் பிணமாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சிஅடைந்த அப்பகுதி மக்கள், திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். 2 பேரின் உடலுக்கு அருகில் விஷ பாட்டில் கிடந்தது. பின்னர் போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்த வாலிபர், திருக்கழுக்குன்றத்தை அடுத்த எலுமிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜ்(வயது 19) என்பதும், அந்த பெண் அதேபகுதியை சேர்ந்த சவுமியா(17) என்பதும் தெரிந்தது.

பிரதீப்ராஜ், ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்த பெண், பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். ஒரே பகுதியை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த காதல் ஜோடி, பாலாற்று பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story