மோகனூரில் புதிய தாலுகா அலுவலகம் காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


மோகனூரில் புதிய தாலுகா அலுவலகம் காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Aug 2018 10:45 PM GMT (Updated: 16 Aug 2018 9:20 PM GMT)

மோகனூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

மோகனூர்,

நாமக்கல் மாவட்டத்தில் 7 தாலுகா உள்ள நிலையில் 8-வது தாலுகாவாக மோகனூர் தாலுகா நேற்று உதயமானது. மோகனூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பிபாஸ்கர், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோதே கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து மோகனூர் தனி தாலுகாவாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு சமீபத்தில் தமிழகஅரசு அரசாணை வெளியிட்டது.

கடந்த 2-ந் தேதி இதற்கான அலுவலக தொடக்கவிழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடக்கவிழா ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. மோகனூர் தாலுகாவை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதையொட்டி மோகனூரில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம், சப்-கலெக்டர் கிராந்திகுமார்பதி, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் ராஜசேகரன், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார், மோகனூர் தாசில்தார் கதிர்வேல், சமூகநலத்துறை தாசில்தார் பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அஜீதன் நன்றி கூறினார்.

இதையொட்டி மோகனூரில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு மோகனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கருமண்ணன், நகர அ.தி.மு.க. செயலாளர் தங்கமுத்து, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் சந்திரமோகன், மோகனூர் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் புரட்சிபாலு, பேரூர் கழக துணைச்செயலாளர் சிவஞானம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அரூர் ஊராட்சி செயலாளர் உமாபதி, மோகனூர் நிலவள வங்கி தலைவர் குணசேகரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராமச்சந்திரன் (அணியாபுரம் தோளுர்), சிதம்பரம் (மணப்பள்ளி), ராமலிங்கம் (செவிட்டுரங்கன்பட்டி), சதாசிவம் (குமரிபாளையம்), சின்ன பெத்தாம்பட்டி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் தியாகராஜன், முன்மோகனூர் பள்ளவாய்க்கால் கடைமடை பகுதி நலச்சங்க தலைவர் சேனாபதி, கூட்டுறவு சங்க இயக்குனர் கார்த்தி, மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு பாண்டியன் உள்பட அரசு அதிகாரிகள், அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். 

Next Story