காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்


காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம்  பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Aug 2018 11:30 PM GMT (Updated: 16 Aug 2018 11:30 PM GMT)

காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் நீடிப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி கூறியுள்ளார்.

சேலம்,

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரி நீர் வருகிறது. இவை அப்படியே மேட்டூர் அணைக்கு வர வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரத்து 800 கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

இதன்மூலம் வெள்ள அபாயம் நீடிப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் வருவாய், பொதுப்பணி, காவல்துறை மற்றும் 24 போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு பாதுகாப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தண்டோரா, ஒலிப்பெருக்கி உள்பட பல்வேறு வழிகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.

எனவே மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், வாழைக்குட்டை உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள் பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் ரோகிணி கூறும் போது, செக்கானூர் கதவணையின் 2 கதவுகள் பழுதானதாக வந்த தகவலின் அடிப்படையில் என்ஜினீயர்களை கொண்டு ஆய்வு செய்தோம். அந்த கதவுகள் பாதுகாப்பாக உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம். செக்கானூர் கதவணை பாதுகாப்பாக உள்ளது. மேலும் பொதுப்பணித்துறையினர் செக்கானூர் கதவணையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்’ என்றார்.

Next Story