செஞ்சி அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலி


செஞ்சி அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 21 Aug 2018 10:00 PM GMT (Updated: 21 Aug 2018 6:34 PM GMT)

செஞ்சி அருகே டிராக்டர் மோதி வாலிபர் ஒருவர் பலியானார். இந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செஞ்சி, 


செஞ்சி வட்டம் வீரணாமூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் அறிவழகன்(வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு, தனது மோட்டார் சைக்கிளில் நாட்டார் மங்கலம் நோக்கி சென்றார். அப்போது வீரணாமூர் என்கிற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த டிராக்டர் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து பற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், நேற்று காலை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு வந்த அறிவழகனின் உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும், அப்போது தான் அறிவழகனின் உடலை வாங்கி செல்வோம் என்று கூறி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் அறிவழகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் அவியூரை சேர்ந்த புஷ்பராஜ் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

Next Story