கேரள வெள்ள நிவாரணத்திற்காக அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை வழங்கிய மாணவி


கேரள வெள்ள நிவாரணத்திற்காக அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை வழங்கிய மாணவி
x
தினத்தந்தி 21 Aug 2018 11:00 PM GMT (Updated: 21 Aug 2018 7:26 PM GMT)

கேரள வெள்ள நிவாரணத்திற்காக, தனக்கு அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை கரூர் பள்ளி மாணவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கரூர்,

கேரளா மழைவெள்ள பாதிப்புக்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுமி நிவாரண உதவியை வழங்கி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையை அடுத்த குமரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்- ஜோதிமணி. இவர்களது மகள் அட்சயா(வயது 12). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தந்தை இறந்துவிட்ட நிலையில் அவரது தாய் ஜோதிமணி வெள்ளியணையை அடுத்த முத்தக்காப்பட்டியில் உள்ள ஒரு சத்துணவு மையத்தில் உணவு சமைத்து கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மகளை வளர்த்து வருகிறார். பிறவியிலேயே அட்சயாவுக்கு இதயத்தில் கோளாறு இருந்தது. ஆனால் அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள பணம் இல்லாததால் அவரது தாய் பலரது உதவியை நாடினார். கடந்த ஆண்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட அட்சயாவுக்கு கரூரை சேர்ந்த இணைந்த கைகள் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக்அலி உதவினார்.

அதன்படி சமூக வலைத்தளங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி மூலம் சென்னையில் அட்சயாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. மறுபடியும் வருகிற நவம்பர் மாதம் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். அதற்காக மீண்டும் நிதி திரட்டப்பட்டது.

இதுவரை ரூ.20 ஆயிரம் வரை நிதி கிடைத்துள்ளது. இதற்கிடையே கேரள வெள்ள பாதிப்பையும், அங்கு மக்கள் பரிதவிப்பதையும் டி.வி.யில் பார்த்து இதயம் கசிந்த அட்சயா, தனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக கிடைத்த பணத்தில் ரூ.5 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்காக மக்கள் பாதை என்ற அமைப்பின் கரூர் நகர பொறுப்பாளர் ஜெய்சுந்தரிடம் வழங்கி, மற்றவர்களின் இதயத்தை நெகிழச்செய்திருக்கிறார்.

இதுகுறித்து அட்சயா கூறுகையில், பலர் உதவியதால் தான், நான் இன்றைக்கு உயிரோடு இருக்கிறேன். மறுபடியும் எனக்கு அறுவை சிகிச்சை செய்ய பலர் பணம் அனுப்புகிறார்கள். கேரளாவில் வெள்ளத்தையும், அங்கே என்னை போல எத்தனையோ சிறுமிகள் தவிப்பதையும் டி.வி.யில் பார்த்தேன். மனசு தாங்கவில்லை. அதனால் தான், எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்திருந்த பணத்தில் ரூ.5 ஆயிரத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன், என்றார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் சிறுமியின் செயல், அனைவரையும் நெகிழச்செய்திருப்பதால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். 

Next Story