மண்டல அளவிலான டெண்டர் முறையால் சத்துணவு முட்டைக்கான விலை குறைய வாய்ப்பு


மண்டல அளவிலான டெண்டர் முறையால் சத்துணவு முட்டைக்கான விலை குறைய வாய்ப்பு
x
தினத்தந்தி 22 Aug 2018 11:00 PM GMT (Updated: 22 Aug 2018 8:15 PM GMT)

மண்டல அளவிலான டெண்டர் முறையால் சத்துணவு முட்டைக்கான கொள்முதல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் கூறினார்.

நாமக்கல்,

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டு காலமாக சத்துணவு முட்டை கொள்முதலுக்கான டெண்டர் மாநில அளவில் நடத்தப்பட்டு வந்தது. அதிலும் கோழிப்பண்ணையாளர்கள் பங்கேற்க முடியாத அளவுக்கு நிபந்தனைகள் இருந்தன. எனவே இந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தோம்.

எங்களது கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சத்துணவு முட்டைக்கான டெண்டரில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது மாநில அளவிலான டெண்டர் முறை ஒழிக்கப்பட்டு, மண்டல அளவிலான டெண்டர் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மேலும் டெண்டர் நிபந்தனைகளும் கோழிப்பண்ணையாளர்கள் நேரடியாக கலந்து கொள்ளும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது. இதற்காக சங்கத்தின் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த டெண்டர் 6 மாத காலத்திற்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த டெண்டரில் தமிழகத்தை 10 மண்டலங்களாக பிரித்து கொடுத்தால் இன்னும் கூடுதலான பண்ணையாளர்கள் டெண்டரில் பங்கேற்க முடியும். கோழிப்பண்ணை நடத்தி வருவதற்கான ஆதாரத்தை கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளிடம் பெற்று வர வேண்டும் என டெண்டரில் வலியுறுத்தி இருப்பதால், பண்ணையாளர்களை தவிர வேறு யாரும் இதில் பங்கேற்க முடியாது.

கோழிப்பண்ணையாளர்கள் நேரடியாக சத்துணவு திட்டத்திற்கு முட்டை வினியோகம் செய்வதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை. மேலும் தனியார் நிறுவனம் கொடுத்த விலையை காட்டிலும் குறைவான விலைக்கு எங்களால் முட்டைகளை கொடுக்க முடியும். எனவே சத்துணவு முட்டை கொள்முதல் விலை இந்த ஆண்டு குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் அரசுக்கு பணம் மிச்சம் ஆகும்.

அண்டை மாநிலமான கேரளாவில் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதை கருத்தில் கொண்டு ஆலப்புழை மாவட்டத்திற்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான முட்டைகளை அனுப்பி உள்ளோம்.

விரைவில் கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்து ரூ.25 லட்சம் நிதியை கொடுக்க உள்ளோம். மேலும் கொல்லம் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பில் முட்டை என மொத்தம் கேரளா வெள்ள நிவாரண நிதியாக ரூ.38 லட்சம் எங்களது சங்கத்தின் சார்பில் கொடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story