பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினால் பா.ஜனதா வேடிக்கை பார்க்காது


பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினால் பா.ஜனதா வேடிக்கை பார்க்காது
x
தினத்தந்தி 26 Aug 2018 11:25 PM GMT (Updated: 26 Aug 2018 11:25 PM GMT)

பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினால் பா.ஜனதா வேடிக்கை பார்க்காது என்று தினேஷ் குண்டுராவுக்கு எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் என்ன செய்துள்ளார்? என்று மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கேள்வி கேட்டுள்ளார். மோடி அமல்படுத்திய திட்டங்களை பார்த்துவிட்டு அதன் பிறகு அவர் பேசி இருக்க வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் விவேகம் இல்லாமல் இருந்து கொண்டிருக்கிறார். இப்போது தினேஷ் குண்டுராவும் அவரை போலவே பேச தொடங்கியுள்ளார்.

நகைச்சுவையான கருத்துகளை கூறுவதே காங்கிரஸ் தலைவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார். நிரவ்மோடி, விஜய் மல்லையா ஆகியோருடன் பிரதமர் மோடிக்கு தொடர்பு உள்ளதாக கூறுகிறார். டோக்லாம் பிரச்சினையில் மோடி திறமையாக செயல்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு வெளிநாட்டினருக்கு நகைச் சுவையை தந்துள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்கும்போதே, தினேஷ் குண்டுராவ் பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடி பற்றி தவறாக பேசி இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது ஆகும். அதே போல் ஷோபா எம்.பி. பற்றியும் தினேஷ் குண்டுராவ் தவறான முறையில் விமர்சனம் செய்துள்ளார். ஒரு பெண் தலைவியை இவ்வாறு பேசுவது சரியல்ல. குடகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வரும் ஷோபாவின் ஈடுபாட்டு உணர்வை தினேஷ் குண்டுராவ் புரிந்துகொள்ள வேண்டும்.

காங்கிரஸ் தலைவர்கள் செல்லும் முன்பே, ஷோபா எம்.பி., குடகுக்கு சென்று அங்கு 3 நாட்கள் தங்கி நிவாரண பணிகள் மற்றும் உதவிகளை செய்தார். வெறும் பெயருக்காக ஷோபா செயல்படுகிறார் என்று கூறுவது சரியல்ல. ஒரு லாரி லோடு நிவாரண பொருட்களை உடன் எடுத்துச் சென்று ஷோபா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்தார்.

தினேஷ் குண்டுராவ் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை தரக்குறைவாக பேசினால் பா.ஜனதா வேடிக்கை பார்க்காது என்று அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டினர். ஆயினும் காங்கிரஸ் கட்சியின் நிலையை அக்கட்சியின் தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story