திற்பரப்பு அருவியில் 20 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


திற்பரப்பு அருவியில் 20 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 30 Aug 2018 11:00 PM GMT (Updated: 30 Aug 2018 3:43 PM GMT)

திற்பரப்பு அருவியில் 20 நாட்களுக்கு பிறகு நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து, சிறுவர்  பூங்காவில் விளையாடி குதூகலத்துடன் வீடு திரும்புகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், சிற்றார் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால்  திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் கொட்டிய வெள்ளம் தடுப்பு வேலியை கடந்து, சிறுவர் பூங்கா, கல் மண்டபம் ஆகியவற்றை மூழ்கடித்தவாறு பாய்ந்தது.  

இதனால், திற்பரப்பு பேரூராட்சி சார்பில் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பேரூராட்சி ஊழியர்கள் 2 பேர் அருவியின் அருகே யாரும் செல்லாதவாறு கண்காணித்தனர். இந்த தடை உத்தரவு கடந்த 20 நாட்களாக அமலில் இருந்தது. இந்த காலக்கட்டத்தில் திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்தநிலையில், நேற்று வெள்ளப்பெருக்கு சற்று குறைந்தது. அத்துடன் திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அருவியில் குறைவான தண்ணீர் பாயும் பகுதியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் பேரூராட்சி ஊழியர்கள் 2 பேர் அதிகம் வெள்ளம் பாயும் பகுதிக்கு யாரும் செல்லாதபடி கண்காணித்தனர். 20 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி கிடைத்ததையொட்டி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story