தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தி முக்கொம்பு கொள்ளிடம் அணையை சீரமைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்


தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தி முக்கொம்பு கொள்ளிடம் அணையை சீரமைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்
x
தினத்தந்தி 30 Aug 2018 11:00 PM GMT (Updated: 30 Aug 2018 6:35 PM GMT)

தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தி, முக்கொம்பு கொள்ளிடம் அணையை சீரமைக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். அங்கு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் படகு மூலம் சென்று ஆய்வு செய்தார்.

ஜீயபுரம்,

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 45 மதகுகள் உள்ளன. இதில் 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி உடைந்தன. இதனால் கொள்ளிடம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதனைத்தொடர்ந்து உடைந்த மதகுகளை தற்காலிகமாக ரூ.95 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 1-வது மதகில் இருந்து 17-வது மதகு வரை 220 மீட்டருக்கு 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அணையின் முன்பாக கான்கிரீட் சுவர் அமைத்தல், மதகு உடைந்த இடங்களில் பாறாங்கற்களை கொண்டு நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் 800 தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மதகுகள் உடைந்த இடத்தில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது. இதனால் கொள்ளிடம் அணையை சீரமைக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் முக்கொம்பு கொள்ளிடம் அணையை பார்வையிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “இன்னும் 4 நாட்களில் பணிகள் முடிவுறும் என்றும், இந்த பணிக்கு தேவைப்பட்டால் ராணுவ உதவி கோரப்படும்“ என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் கொள்ளிடம் அணையில் தண்ணீரின் வேகத்தால், சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், இனி வரும் நாட்களில் ராணுவத்தினர் உதவியுடன் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்று முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியை நாட்டுப்படகு மூலம் சென்று ஆய்வு செய்தார். பின்னர் இது தொடர்பாக அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

முக்கொம்பு கொள்ளிடம் அணை சீரமைப்பு பணியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவினரும், பாதுகாப்புக்காக தீயணைப்பு மீட்புக்குழுவினரும் முகாம் அமைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவ குழுவினரிடம் அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் 214 பேர் உடல் சோர்வு, சிறு காயம் உள்பட பல்வேறு உபாதைகளுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story