கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உடைப்பை அடைக்க மணல்மூட்டைகள் தயார்செய்யும் பணி தீவிரம்


கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உடைப்பை அடைக்க மணல்மூட்டைகள் தயார்செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 2 Sep 2018 11:00 PM GMT (Updated: 2 Sep 2018 7:09 PM GMT)

கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உடைப்பை அடைக்க மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைக்காலத்துக்குள் ஆற்றங்கரையை நிரந்தரமாக பலப்படுத்த வேண்டும் என்று, மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம்,

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாகை மாவட்டம் அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பாறாங்கற்களை போட்டும் மணல்மூட்டைகளை அடுக்கியும் நூற்றுக்கணக்கான பனை மரங்களை உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் போட்டும் உடைப்பை அடைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. எனவே தற்போது உடைப்பை அடைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கொள்ளிடம் பொதுபணித்துறை அலுவலகத்தில் தினமும் மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கிருந்து மணல் மூட்டைகள் டிராக்டர்கள் மற்றும் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு முதலைமேடுதிட்டு, அளக்குடியில் உள்ள ஆற்றின் கரையில் உள்ள உடைப்பில் கொட்டப்பட்டு உடைப்பு அடைக்கப்பட்டு வருகிறது. ஆனால் பணிகள் நிறைவு பெறவில்லை.

தற்போது தற்காலிகமாக உடைப்பை அடைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மழைக்காலம் தொடங்கி விட்டால் நிச்சயமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து தற்காலிக அடைப்பு உடையும் ஆபத்து உள்ளது. எனவே தற்காலிக அடைப்பு பணியை விரைந்து முடித்து மழைக்காலத்துக்குள் நிரந்தரமாக கரையை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story