மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Sep 2018 11:41 PM GMT (Updated: 2 Sep 2018 11:41 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். மெயின் அருவி, சினிபால்சில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் பரிசல்களில் சவாரி செய்து காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தொங்கு பாலத்திற்கு செல்லும் கம்பிகள் அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. தற்போது அதனை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்ததாலும், மேட்டூர் அணை இந்த ஆண்டில் மட்டும் 4 முறை நிரம்பி உள்ளது. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டத்தை 120 அடியாக நிலைநிறுத்தி வரும் வகையில், அணைக்கு தண்ணீர் வரத்தை பொறுத்து நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 19 ஆயிரத்து 800 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாகவே இருந்தது. மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 800 கனஅடி நீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

சுரங்க மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த தண்ணீர் மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக திறந்துவிடப்படுகிறது. இதனால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் பாய்ந்தோடும் காட்சியை காண விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.

அணையின் நீர்மட்டம் நேற்று 120.19 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story