சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்க கூடாது விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு


சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்க கூடாது விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 3 Sep 2018 11:00 PM GMT (Updated: 3 Sep 2018 8:40 PM GMT)

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்க கூடாது என்று ஏரி-ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 340 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக் களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

ஏரி-ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தினர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், அரியலூர் மாவட்டம், செட்டிதிருக்கோணம் கிராமத்தில் தனியார் சிமெண்டு ஆலை சார்பில், சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.

வறட்சியான மாவட்டமாக உள்ள அரியலூர் மாவட்டத்தில், பல்வேறு சுண்ணாம்புக்கல் சுரங்கங்களால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டுள்ளனர். மேலும் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாய சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்காமல் ஆலைக்கு சாதகமானவர்களை கொண்டு கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி முடித்து உள்ளனர். இங்கு சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைத்தால் பெரிய திருக்கோணம், செட்டி திருக்கோணம், முனியங்குறிச்சி ஆகிய ஊர் மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவர்.

எனவே புதிய சுரங்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது. மீறி அனுமதி வழங்கினால் சுரங்கம் மற்றும் சிமெண்டு ஆலையை முற்றுகையிடும் போராட் டத்தில் ஏரி-ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், திருமானூர் பகுதியில் புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் பளிங்காநத்தம், வெங்கனூர், கரைவெட்டி, சுக்கிரன் ஏரி ஆகிய ஏரிகளின் பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாசன வாய்க்காலில் உள்ள கிளை வாய்க்கால்களில் மதகு இல்லாததால் தண்ணீரை முறையாக தேக்கி விவசாயம் செய்ய இயலவில்லை. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் அப்பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கிளை வாய்க்கால்களில் மதகு அமைத்து விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கீழராமநல்லூர் கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், கொள்ளிட ஆற்றின் குறுக்கே மேலராமநல்லூர் தென்புறம் தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் வகையில் ரூ.56 கோடியில் பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு 3 மாதத்துக்கு மேலாகியும் இதுவரை எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. இது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலராமநல்லூர், கீழராம நல்லூர் இணைப்பு சாலை இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பின்னர் மாற்றுத் திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர் களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளு மாறு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story