மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 4 Sep 2018 9:00 PM GMT (Updated: 4 Sep 2018 1:08 PM GMT)

மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உடன்குடி,

மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

மகிமை திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் மணப்பாடு திருச்சிலுவை ஆலயமும் ஒன்றாகும். கடற்கரையில் இயற்கையாக அமைந்த மணல் குன்றின் மீதுள்ள ஆலயத்தில் ஆண்டுதோறும் மகிமை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆலயத்தில் 439–வது ஆண்டு மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலி நடந்தது. பின்னர் காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து வீரபாண்டியன்பட்டினம் பங்குத்தந்தை ஆன்ட்ரூ டிரோஸ் ஆலய கொடிமரத்தில் கொடியேற்றினார். பின்னர் மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடந்தது. பங்குத்தந்தைகள் செட்ரிக் பீரிஸ், செல்வன், ததேயுஸ், அருமைநாதன், சகாயம், ரோ‌ஷன், எட்வின் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

ஆராதனை

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் அதிகாலை 5.15 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி, தொடர்ந்து பங்கு ஆலயத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

10–ம் திருநாளான வருகிற 13–ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட குரு உபால்டு மறையுரையாற்றுகிறார்.

திருவிழா திருப்பலி

11–ம் திருநாளான 14–ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாள திருப்பலி, 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடக்கிறது. பின்னர் காலை 11 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்க திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரிய ஜான் கோஸ்தா, உதவி பங்குத்தந்தை மரிய சேவியர் ராஜா, திருத்தல ஆன்ம குரு தெயோபிலஸ், குரு பாக்கிய பவுல் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story