வெள்ளத்தால் மதகுகள் உடைப்பு: திருச்சி கொள்ளிடம் அணையில் ராணுவ குழுவினர் திடீர் ஆய்வு


வெள்ளத்தால் மதகுகள் உடைப்பு: திருச்சி கொள்ளிடம் அணையில் ராணுவ குழுவினர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Sep 2018 11:15 PM GMT (Updated: 4 Sep 2018 6:54 PM GMT)

திருச்சி கொள்ளிடம் அணையில் வெள்ளத்தால் உடைந்த மதகுகளையும், சீரமைப்பு பணிகளையும் ராணுவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பணிகள் திருப்தியாக இருப்பதாக அவர்கள் கூறினர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம், முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் அணைக்கு வந்த வெள்ளத்தால் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி இரவு அணையின் 9 மதகுகள் உடைந்தன. இதனை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அணையின் அருகே தண்ணீரில் மணல் மூட்டைகள், பாறாங்கற்களைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தண்ணீர் வீணாக ஆற்றில் செல்லும் இடத்தில் பாறாங்கற்களை போட்டு அடைத்து வருகின்றனர். இந்த பணியில் இரவு, பகலாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகளையும், சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். அப்போது சீரமைப்பு பணிகள் 40 சதவீதம் கூட முடியவில்லை என அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் சீரமைப்பு பணிக்கு ராணுவத்தை அழைக்கவில்லை எனவும் கூறியிருந்தார். ராணுவத்தின் உதவியை தமிழக அரசு நாடவில்லை என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு ராணுவ பயிற்சி முகாமில் இருந்து என்ஜினீயர் மேஜர் அரவிந்த் தலைமையில் ஹவில்தார்கள் நாகராஜ், தினேஷ் உள்பட 4 பேர் கொண்ட குழுவினர் ராணுவ வாகனத்தில் நேற்று காலை 7 மணிக்கு முக்கொம்பு மேலணைக்கு வந்தனர். பின்னர் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அணையில் இறங்கி உடைந்த மதகுகள் பகுதியையும், மணல் மூட்டைகள், பாறாங்கற்கள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தும் பணியையும் மற்றும் இரும்பு குழாய்கள் தண்ணீரில் இறக்கப்படுவதையும் ராணுவ குழுவினர் ஆய்வு செய்தனர்.

அணையின் மேல் பகுதியில் உள்ள பாலத்தில் ஏறி நின்றும் பார்வையிட்டனர். அவர்கள் கொண்டு வந்த தொலைநோக்கி கருவி மற்றும் நவீன தொழில்நுட்ப கருவி மூலம் அணையில் உடைந்த மதகுகள் பகுதியை அளவீடு செய்தனர். அதன்பின் சீரமைப்பு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை உயர்அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

தற்காலிக சீரமைப்பு பணிகளை ராணுவ குழுவினர் ஆய்வு செய்ததால் நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வை தொடர்ந்து ராணுவம் சீரமைப்பு பணியை மேற்கொள்ளும் என பரவலாக பேசப்பட்டது. முக்கொம்புக்கு வந்த ராணுவ குழுவினரின் பயிற்சி மையம் சென்னை ரெஜிமண்ட் ராணுவ மையத்துடன் தொடர்புடையது எனவும், அங்கு வந்திருந்த ராணுவ குழுவினர் என்ஜினீயர்கள் என்றும், அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். 5 மணி நேரம் முக்கொம்பு கொள்ளிடம் அணைப்பகுதியில் இருந்த ராணுவ குழுவினர் பகல் 12 மணி அளவில் பெங்களூரு புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், “ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளின் படி ராணுவ குழுவினர் அணையில் சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். பணிகள் முழுவதும் திருப்திகரமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதே பணியை தொடர்ந்து மேற்கொண்டால் துரிதமாக பணியை முடித்துவிடலாம் என ராணுவ குழுவினர் தெரிவித்தனர்” என்றார்.

ராணுவத்தினர் ஆய்வு குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறும்போது, “சேதமடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பணி குறித்து கூடுதல் தொழில்நுட்ப ஆலோசனையினை தருமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராணுவ அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெங்களூருவில் இருந்து ராணுவ குழு ஒன்று முக்கொம்பிற்கு வருகை தந்து சீரமைப்பு பணியினை ஆய்வு மேற்கொண்டது. பெரிய பாறாங்கற்களை கொண்டு உடைப்பினை சரிசெய்வதையும், மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி தடுப்பு ஏற்படுத்தும் பணியினையும் பார்வையிட்டனர். அப்போது பொதுப்பணித்துறை மூலம் தற்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளான மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் செல்வதை தடுக்கவும், பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு உடைப்பினை அடைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது எனவும், தற்போது நடைபெற்று வரும் தடுப்பு நடவடிக்கைகள் முறையே சரியானதாக உள்ளது எனவும் இப்பணியினை தொடர்ந்து மேற்கொண்டு முடிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் ராணுவத்தின் உதவி இப்பணிக்கு தேவைபடாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார்.

Next Story