கடைமடை வரை விவசாயம் நடக்க வழிவகை செய்யக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


கடைமடை வரை விவசாயம் நடக்க வழிவகை செய்யக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Sep 2018 10:45 PM GMT (Updated: 4 Sep 2018 7:57 PM GMT)

கடைமடை பகுதி வரை விவசாயம் நடக்க வழிவகை செய்யக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

கரூர் மாவட்ட பா.ம.க. சார்பில் கரூர் ஜவகர்பஜாரிலுள்ள தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் ராக்கி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கரூர் காவிரி, அமராவதி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியபோதும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேரவில்லை. நீர்மேலாண்மையை முறையாக கையாளாமல் விட்டதால் அவ்வளவு தண்ணீரும் கடலில் சென்று வீணாகிவிட்டது என குற்றம் சாட்டி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கரூர் மாவட்டத்திலுள்ள பஞ்சப்பட்டி ஏரி, தாதம்பாளையம் ஏரி உள்ளிட்ட பெரிய ஏரிகளில் காவிரி- அமராவதி ஆற்று உபரிநீரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழாய் மூலம் கொண்டு சென்று அதில் சேகரிக்க வேண்டும். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குவதோடு, ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயமும் செழிப்பாக நடக்கும். மேலும் காவிரி, அமராவதி ஆறுகளை ஒட்டி செல்லும் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேர வழிவகை செய்ய வேண்டும். மேலும் நீர்நிலைகளில் குப்பை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் உள்ளிட்டவை கலக்கிறதா? என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நொய்யல் ஆற்றில் சாயக் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். சாயக்கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை அரசு வழங்க முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் குணசேகரன், நகர செயலாளர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் வரதராஜன், மாநில உழவர் பேரியக்க துணை செயலாளர் ஞானசேகரன், தாந்தோன்றி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி உள்பட பா.ம.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story