கோவைக்கு பயிற்சி பெற வந்த அசாம் வன அதிகாரி கடத்தப்பட்டாரா? தீவிர தேடுதல் வேட்டை


கோவைக்கு பயிற்சி பெற வந்த அசாம் வன அதிகாரி கடத்தப்பட்டாரா? தீவிர தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 4 Sep 2018 11:00 PM GMT (Updated: 4 Sep 2018 7:57 PM GMT)

கோவைக்கு பயிற்சிபெற வந்த அசாம் வன அதிகாரி மாயமானார். அவர் கடத்தப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பாஸ்கர் பெகு (வயது 51). இவர் அங்கு வன அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 24-ந் தேதி பாஸ்கர் பெகு பயிற்சிக்காக கோவை வன கல்லூரிக்கு வந்தார்.

பின்னர் அவர் சாய்பாபா காலனியில் உள்ள வன கல்லூரி முதல்வரிடம் தான் பயிற்சிக்கு வந்ததற்கான ஆவணங்களை ஒப்படைத்தார். பயிற்சி வகுப்பு 27-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. இதனால் பாஸ்கர் பெகு கல்லூரி அறையில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி மதியம் வெளியே சென்ற அவர் அதன்பின்னர் அறைக்கு திரும்பவில்லை. இது குறித்து வன கல்லூரி முதல்வர் அசோக்குமார் சாய்பாபாகாலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பாஸ்கர் பெகுவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பாஸ்கர் பெகுவை தேடும் பணிக்கு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கோவை பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேடினர்.

பாஸ்கர் பெகு ஊட்டிக்கு சுற்றுலா சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கும் தனிப்படை போலீசார் தேடிச்சென்றனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து அசாமில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாஸ்கர் பெகுவுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை பார்க்கிறார். மற்றொரு மகன் அசாமில் போலீசாக உள்ளார்.

தந்தை மாயமான தகவல் கிடைத்ததும் பாஸ்கர் பெகுவின் மகன்கள் கோவை வந்தனர். அவர்களும் போலீசாருடன் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பாஸ்கர் பெகு தங்கி இருந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பக்கத்து மாவட்டங்களுக்கும் பாஸ்கர் பெகுவின் புகைப்படங்களை அனுப்பி தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அவரை யாரும் கடத்திச்சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story