நாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு போலீசார் விசாரணை


நாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Sep 2018 10:15 PM GMT (Updated: 5 Sep 2018 7:04 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே நாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் குழந்தையின் உடலை போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுபாளையம் நாலாநல்லூர் நத்தம் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று சாலையோரத்தில் வீசப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வல்லவராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றினர். அப்போது குழந்தையின் உடலை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை நாய்கள் கடித்து குதறியதால் கால் மற்றும் இடுப்பு பகுதி உள்ளிட்டவைகள் முற்றிலுமாக சிதைந்து கிடந்தன. இதனால் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் குழந்தையை வெளியூரில் இருந்து யாராவது வந்து வீசி சென்றார்களா? அல்லது பெற்ற தாயே குழந்தையை வீசினாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விளக்குடி கிராம நிர்வாக அலுவலர் வினோத் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story