ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் மாணவ-மாணவிகள் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து


ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் மாணவ-மாணவிகள் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து
x
தினத்தந்தி 5 Sep 2018 10:30 PM GMT (Updated: 5 Sep 2018 8:01 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத் தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களுக்கு மாணவ-மாணவிகள் ரோஜா பூ கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பெரம்பலூர்,

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டி மறைந்த மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந்தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஆசிரியர் தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவிகள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது மாணவ-மாணவிகளிடம் இருந்து உற்சாகமாகவும், புன்சிரிப்புடனும் ஆசிரியர்கள் ரோஜாப்பூவை வாங்கியதை காண முடிந்தது.

மேலும் வகுப்பறைகளில் அலங்கரிக்கப்பட்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாணவ-மாணவிகள் பாடம் நடத்த வந்த ஆசிரியர்களை வரவேற்று, அவர்களுக்கு இனிப்பு கொடுத்தனர். ஆசிரியர்களை கேக் வெட்ட வைத்து, பின்னர் அவர்களுக்கு மாணவ-மாணவிகள் கேக்கினை ஊட்டி மகிழ்ந்தனர். கரும்பலகையில் ஆசிரியர்களை வாழ்த்தி கவிதை எழுதியிருந்தனர். மேலும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், தங்களுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

இதையடுத்து பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் சுந்தரராஜூ தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் பெரம்பலூர் முன்னாள் நகராட்சி தலைவர் முகுந்தன், அரிமா சங்க தலைவர் கதிரேசன் ஆகியோர் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக அரியலூர் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் தமிழ்மாறன் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து மாணவ-மாணவிகள் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். முன்னதாக தமிழாசிரியர் சிலம்பரசன் வரவேற்றார். முடிவில் தொழிற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஆசிரியர் தின விழாவையொட்டி ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களுக்கு கவிதை, பேச்சுப்போட்டி நடந்தது. இதற்கு பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் தின விழாவினையொட்டி பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story